ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கருகுபில்லி பகுதியை சேர்ந்தவர் சிம்மாசலம் ( வயது25). இவரது மனைவி பவானி (வயது19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சிம்மாசலம், ஜகத்கிரி குட்டாவில் தங்கி இருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார்.
கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்றுகொண்டு பயணம் செய்தனர். ரெயில், புவனகிரி அடுத்த வங்கபள்ளி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கணவன், மனைவி இருவரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.