விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சிறை’ திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, “பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்!
அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு.
ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க.

விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்.
அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த ‘சிறை’ படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?!
படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட ‘நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா’னு கேட்டதாக சொன்னாங்க.” எனப் பேசினார்.