சிக்கலில் ஆயுஷ் மாத்ரே! இனிமேல் வாய்ப்பு இல்லை? பிசிசிஐ முக்கிய முடிவு!

India national under-19 cricket team: சமீபத்தில் நடைபெற்று முடிந்த U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, பரம்பரை எதிரியான பாகிஸ்தானிடம் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்றதை பிசிசிஐ-யால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் எதிரொலியாக, இந்திய U19 அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர் ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add Zee News as a Preferred Source

இறுதிப்போட்டியில் என்ன நடந்தது?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணி இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் அதிரடியாக விளையாடி 71 பந்துகளில் சதம் விளாசினார்.  50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 26.2 ஓவர்களில் வெறும் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது இந்திய U19 வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மிக மோசமான தோல்விகளில் ஒன்றாகும்.

பிசிசிஐயின் கடும் நடவடிக்கை

லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, மிக முக்கியமான போட்டியில் இப்படி திணறியது ஏன்? என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பிசிசிஐ எடுத்துள்ள நடவடிக்கைகள்.

தோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் நேரடி விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அணியின் மேலாளரிடம் இந்த தொடர் குறித்தும், வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

இறுதி போட்டியின் போது, இந்திய வீரர்கள் சிலர் களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டது குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன. 

குறிப்பாக, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அலி ரஸா விக்கெட் வீழ்த்தியபோது, இந்திய கேப்டன் மற்றும் வீரர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்திற்குள்ளானது. இது குறித்தும் விசாரிக்கப்படலாம்.

அடுத்தது என்ன?

வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள U19  உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள பிசிசிஐ விரும்புகிறது. வீரர்களின் தேர்வு, வியூகங்கள் மற்றும் கள செயல்பாடு ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டுவர இந்த ஆய்வு கூட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “வெறும் தோல்வி மட்டுமல்ல, களத்தில் வீரர்களின் அணுகுமுறையும் கவலையளிக்கிறது,” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் நாட்களில் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில் சில அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.