வங்கதேசத்தவரைக் கண்டுபிடிக்க மொபைல் போனில் ஸ்கேன்? – சர்ச்சையாகும் உத்தரப்பிரதேச போலீஸாரின் வீடியோ

இந்தியாவில் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து நாடுகடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் போலீஸார் பொதுமக்கள் பங்களாதேஷ் பிரஜைகள் இருக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்க மொபைல் போன் கொண்டு ஸ்கேன் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது.

மக்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் போலீஸார் பொதுமக்களின் பின்புறம் மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்கின்றனர்.

உத்தரப்பிரதேச போலீஸாரின் இச்செயல் சர்ச்சையாகி இருக்கிறது. வைரலாகி இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உண்மையிலேயே அப்படி ஒரு சோதனை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஸ்கேன் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் பங்களாதேஷ் பிரஜையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்று போலீஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச போலீஸார்
உத்தரப்பிரதேச போலீஸார்

இது குறித்து மொபைல் போன் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி கூறுகையில், ”உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் எங்களது பகுதிக்கு வந்தனர். அவர்கள் எங்களிடம் ஆவணங்களைக் காட்டும்படி கேட்டனர். நாங்களும் காட்டினோம்.

அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், நாங்கள் ஒரு மெஷின் கொண்டு வந்திருக்கிறோம். அது பங்களாதேஷ் பிரஜையை அடையாளம் காட்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் மெஷின் எதுவும் இல்லை.

அவர்கள் தங்களிடம் இருந்த மொபைல் போனை எனது மைத்துனரின் பின்னால் வைத்தனர். மற்றபடி மிரட்டவில்லை. நாங்கள் இங்கு 1986ம் ஆண்டில் இருந்து வசிக்கிறோம். எங்களது சொந்த ஊர் பீகார் ஆகும்” என்றார்.

ரோஷ்னியின் அத்தை ரபிலா இது குறித்து கூறுகையில், ”போலீஸார் அனைவரிடமும் வந்து ஸ்கேன் செய்து கொள்ள சொன்னார்கள். ஒரு நபரின் முதுகில் ஸ்கேன் செய்தால், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது உடனடியாகத் தெரிந்துவிடும் என்று தெரிவித்தார்கள்.

எங்களது ஆவணங்களைப் பார்த்தவுடன் சென்றுவிட்டார்கள். சமீப நாட்களில் இந்தப் பகுதியில் இதுபோன்று இரண்டு சரிபார்ப்புப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த இரண்டு முறைகளிலும், காவல்துறையினர் குடியிருப்பாளர்களிடம் ஆவணங்களைக் கேட்டுப் பெற்று, சோதனைகளை முடித்த பிறகு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் ஸ்கேன் செய்ததில் ஒருவரை அவர் பங்களாதேஷ் பிரஜை என்று காட்டியது. ஆனால் அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.