நெல்லை: திடீர் சோதனை… கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அத்துடன் ஆமிர் சுகைலையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரத்தினபாலன், முசாமில் முர்சித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஆயுதத்தடைச் சட்டப்பிரிவுகள் 25(1), 27(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரத்தினபாலன் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வில் பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இவர், கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கி வாங்கி கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தினபாலன், கடந்த சில ஆண்டுகளாகவே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்த துப்பாக்கியை விற்க முடிவு செய்தாராம்.

ஆமிர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோரின் உதவியுடன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை விற்றுள்ளார். ஆனால், அந்த துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக்கூறி வாங்கியவர் அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய துப்பாக்கி திரும்ப வந்தபோது 3 பேரும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். திண்டுக்கலுக்கு விரைந்த தனிப்படை போலீஸார் அங்கு நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாகுல் ஹமீதுதான் துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பியர் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரும் சிக்கினார்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

இந்த கள்ளத் துப்பாக்கியை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரூ.1.25 லட்சத்திற்கு வாங்கி, திண்டுக்கலைச் சேர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கு விற்க முயன்றது தெரிய வந்தது. ”பறிமுதல் செய்யப்பட்ட இத்துப்பாக்கி, 7.65 மி.மீ ரக பிஸ்டல் வகையைச் சேர்ந்தது. தொழிற்சாலைகளில் முறையாகத் தயாரிக்கப்படும் நேர்த்தி இந்த துப்பாக்கியில் இல்லை. கைகளால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிதான் இது. தயாரிப்பு நிறுவன எண்கள், வரிசை எண்கள் எதுவும் இதில் இல்லை. இது முற்றிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பிஸ்டல்” என்றனர் போலீஸார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.