விராட் கோலியின் சதம் வீண்…இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடரை வென்ற நியூசிலாந்து

சென்னை,

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்தநிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் இருந்தது.

அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் கான்வே 5 ரன்கள் , நிக்கோலஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வில் யங் 30 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து டேரில் மிட்சேல் , கிளென் பிலிப்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டு அதிரடி காட்டினர்.நிலைத்து ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர். கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும், டேரில் மிட்சேல் 137 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ராணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 338 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கில் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 11 ரன்கள், கில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்கள், கேஎல் ராகுல் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் விராட் கோலி நிலைத்து ஆடினார். அவருடன் நிதிஸ் ரெட்டியும் சிறப்பாக விளையாடினார். நிதிஸ் ரெட்டி அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஹர்ஷித் ராணா களமிறங்கி அதிரடி காட்டினார். கோலி , ராணா இருவரும் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதமடித்து அசத்தினார். மறுபுறம் ராணா அரைசதமடித்து 52 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக இருந்த கோலி 124 ரன்களில் ஆட்டமிழந்தார்.அத்துடன் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.