கொல்கத்தா,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
சவுதலா கிராமத்தைச் சேர்ந்த துார்ஜன் மாஜி (82) என்ற பழங்குடியின முதியவர், தேர்தல் ஆணையம் பிறப்பித்த நோட்டீஸின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் விசாரணைக்காக அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டிய சில மணி நேரங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதியவர் உயிரிழப்பு தொடர்பாக அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற 23 நாள்களுக்குப் பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச் சதி, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அதிகாரிகள் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.