மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டுக்கு ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்” என்றார்.

இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் இன்ஜின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்று கடுமையாக மோடியை ஸ்டாலின் சாடியிருக்கிறார்.