பாகிஸ்தானிற்கு பதில் பங்களாதேஷ்? டி20 உலக கோப்பையில் புதிய ட்விஸ்ட்?

ஐசிசி டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகள் இந்த தொடரை சுற்றி நடைபெற்று வருகிறது. வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டிருந்தார். ஆனால் சில சர்ச்சைகள் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு டி20 உலக கோப்பை விளையாட வர மாட்டோம் என்று தெரிவித்தது. இந்தியாவில் எங்களது வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்று மாறும் ஐசிசி இடம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஏற்கனவே அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்றதால் ஐசிசி இதனை ஏற்க மறுத்தது. 

Add Zee News as a Preferred Source

பங்களாதேஷ் வெளியேற்றம் 

பங்களாதேஷ் அணிக்கு ஐசிசி கடைசியாக வாய்ப்பு கொடுத்தது. இருப்பினும் பங்களாதேஷ் அணி டி20 உலக கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 விளையாட தகுதி பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் இந்த டி20 உலக கோப்பையையில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு பயணம் செய்ய மாட்டோம் என்று தெரிவித்ததால், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியை தொடர்ந்து பாகிஸ்தானும் விலகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஐசிசியின் நடவடிக்கை 

ஏற்கனவே ஐசிசி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. டி20 உலக கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகினால் அடுத்து எந்த ஒரு சர்வதேச அணியுடனும் பாகிஸ்தான் விளையாட முடியாது என்று தெரிவித்திருந்தது. மேலும் எந்த ஒரு வெளிநாட்டு வீரர்களும் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட அனுமதி தரப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான அணி டி20 உலக கோப்பையில் இருந்து விலகினால், அவர்களுக்கு பதிலாக பங்களாதேஷ் அணி சேர்த்துக் கொள்ளப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது 

இதுகுறித்து ஐசிசி அதிகாரிகள் தெரிவித்ததாக வெளியான தகவலில், “பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் இருந்து விலகினால் பங்களாதேஷ் அணிக்கு இந்த தொடரில் விளையாட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் பாகிஸ்தான் விளையாட திட்டமிடப்பட்ட இலங்கையில் விளையாடுவார்கள். இதனை ஏற்பாடு செய்வது மிகவும் எளிது தான்” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தான் vs இந்தியா 

பாகிஸ்தான் விலகினால் இந்திய அணி இடம் பெற்றுள்ள குரூப்பில் பங்களாதேஷ் அணி விளையாடும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி, பாகிஸ்தான் பிரதமருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விரைவில் பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்குமா இல்லையா என்பதை தெரிவிக்கவுள்ளனர். இதற்கு இடையில் பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பை காண 15 பேர் கொண்ட அணியையும் சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்த டி20 உலக கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான அணி விலகினால் அந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இலங்கையில் விளையாடும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.