சசிகுமாரின் சம்பவங்கள்.. முகநூல் ஓய்வு போஸ்டால் பாய்ந்தது போக்சோ வழக்கு..! 38 ஆண்டு சேட்டைகளுக்கு எண்டு கார்டு..!

பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு , முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இருந்து பாராட்டுவிழா நடத்துவது வழக்கம் ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மீது முன்னாள் மாணவர் சங்கத்தினர் அளித்த புகாரால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் 3 வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலராக இருப்பவர் சசிக்குமார் , அங்குள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார்.

ஆசிரியர் பணியில் 38 ஆண்டுகள் பணியாற்றிய அவர் சில தினங்களுக்கு முன்பாக ஓய்வுபெற்றார். தான் ஆசிரியர் பணியின் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட செய்தியை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் மலர்ந்த முகத்துடனான புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தார் சசிக்குமார். இதைப் பார்த்த அவரிடம் பயின்ற முன்னாள் மாணவிகள் பலரும், தாங்கள் குழந்தை பருவத்தில் பள்ளியில் படித்தபோது தலைமையாசிரியர் சசிகுமாரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கமெண்டுகளில் பதிவிட்டனர்.

சிலர் ஒரு வழியாக இந்த மனித மிருகம் ஓய்வுபெற்றுவிட்டது என தங்கள் அனுபவத்தை அதனோடு எழுதி ஷேர் செய்தனர். இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களே சசிக்குமாரின் நிஜமுகத்தை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தினரே , சசிக்குமார் மீது மலப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளித்தனர். சசிகுமாரிடம் பயின்ற முன்னாள் மாணவிகள் இருவர் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பையே நடத்தினர்.

தலைமையாசிரியராக இருந்தபோதும், ஆசிரியராக இருந்த காலத்திலும் சசிக்குமார் பள்ளியில் பயின்ற பல பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். அவர் எப்போதும் 9 முதல் 12 வயதுவரையுள்ளக் குழந்தைகளைத் தான் குறிவைப்பார்.

இவரது நடத்தையால் இரு மாணவிகள் படிக்கும்போதே தற்கொலை முயற்சிவரை சென்றனர் அதில் ஒருமாணவி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து தான் மீண்டு வந்தார். பள்ளிக்கூட நிர்வாகம் அவரைக் கண்டிக்கவே இல்லை எனக்கூறி சசிக்குமாரின் முகத்திரையை கிழித்தனர்.

அப்போது பள்ளியின் நிர்வாகத்தில் இருந்த கன்னியாஸ்திரியிடம் , சசிகுமாரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் முறையிட்ட நிலையிலும் அவர்களும் அதை பொருட்படுத்தாமல் இருந்தார்கள்” எனவும் முன்னாள் மாணவிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக தற்போது பிரபலமான எழுத்தாளராக உள்ள முன்னாள் மாணவி ஒருவர் சசிகுமாரின் சில்மிஷங்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுத்தால் சம்பவம் செய்ததால், சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடந்து கவுன்சிலர் சசிக்குமார் தலைமறைவானார். தனிப்படை அமைத்து அவரை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் சசிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி அவரை, தங்கள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.