இபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: ஆக.3-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.48,000 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, கடந்த 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக, ‘ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது ரூ.713.34 கோடியாக உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஒப்பந்தம் எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வண்டலூர் முதல் வாலாஜா வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை 5 ஆண்டுகளுக்கு மேறரகொள்ள 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ”விற்கு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2018 அக்டோபர் 9-ம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதுமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது வழக்கு விசாரணையில் ஆர்.எஸ்.பாரதி தரப்பில், “இந்த வழக்கில் முன்பு ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரால் இந்த வழக்கில் தன் தரப்புக்கு ஆஜராக முடியாது. எனவே, வேறு வழக்கறிஞர்கள் குழு தான் தற்போது இந்த வழக்கை கையாளுகிறது. அது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரப்பட்டது.

அப்போது, தலைமை நீதிபதி இந்த வழக்கை அத்தனை நாட்கள் ஒத்திவைக்க முடியாது எனக் கூறி விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் முதல் இறுதி விசாரணை தொடங்கும் எனவும், எனவே எந்த தரப்பினரும் விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கக்கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.