கடுவா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கடுவா என்கிற திரைப்படம் வெளியானது. விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார். தியேட்டர்களில் வெளியான இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் கடுவாக்குன்னல் குருவச்சன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்திருந்தார். இது எண்பதுகளில் நிஜமாக வாழ்ந்த, தற்போதும் உயிருடன் இருக்கின்ற ஒருவரின் வாழ்க்கை சம்பவங்களை மையப்படுத்தி உருவான கதை. அந்த கதாபாத்திரத்தை தான் பிரித்விராஜ் நடித்திருந்தார்.

அதேசமயம் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்த படத்தின் காட்சிகள் இருப்பதாக கூறி ஏற்கனவே படம் ரிலீஸ் ஆன சமயத்தில் படத்தை வெளியிட தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார் நிஜமான கடுவாக்குன்னல் குருவச்சன். இதனால் பட வெளியீட்டில் தாமதம் கூட ஏற்பட்டது. பின்னர் குருவச்சன் என்கிற பெயர் வரும் இடத்தில் எல்லாம் குரியச்சன் என பெயர் மாற்றப்பட்டு படம் வெளியானது. விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் கடுவாக்குன்னல் குருவச்சன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த படத்தில் குருவச்சன் என்கிற பெயர் குரியச்சன் என மாற்றப்பட்டு வெளியானாலும் வளைகுடா நாடுகளில் வெளியான பிரதிகளில் குருவச்சன் என்கிற பெயர் மாற்றப்படாமலேயே வெளியாகி உள்ளது. இது தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே ஓடிடியில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் கடுவாக்குன்னல் குருவச்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.