வைகோவுக்கு புதிய அங்கீகாரம்; மதிமுக தொண்டர்கள் ஹேப்பி!

தமிழக அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டவர்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒருவர். திமுகவில் கருணாநிதிக்கு சமமாக தொண்டர்கள் செல்வாக்கை பெற்று திகழ்ந்தவர்.

வைகோ 3 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை அலங்கரித்தவர். அப்போது தன்னுடைய திறமையான பேச்சால் பாராளுமன்ற புலி என்று அழைக்கப்படுகிறார் வைகோ.

தமிழ் ஈழ விடுதலை புலிகளை நேற்றும் ஆதரித்தேன்.. இன்றும் ஆதரிக்கிறேன்.. நாளையும் ஆதரிப்பேன் என தன்னை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் என்பதாலேயே வைகோ பல வழக்குகளை சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில் திடீரென கடந்த 1992ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல முயன்றதாக பழிசுமத்தப்பட்டு கட்சியில் இருந்து வைகோ அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதன் பின்னர், கடந்த 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக கடந்த 2001ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.

இதன் பிறகு திமுகவுடன் நெருக்கம் பின்னர் அதிமுகவுடன் தோழமை என, மாறி மாறி பயணம் செய்த வைகோ கருணாநிதியின் மறைவுக்கு முன்னதாக திமுக கூட்டணியில் சேர்ந்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்றதோடு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மதிமுகவுக்கு கிடைத்ததால் வைகோ எம்.பி ஆனார்.

மாநிலங்களவைக்கு வைகோ சென்றால், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியும் என திமுக கருதியது. இதனை மெய்பிக்கும் வகையில், எப்போதும் போலவே மாநிலங்களவையில் வைகோ அபார பேச்சால் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து, அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கான காரணம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில், வைகோ பேச எழுந்தார். அப்போது துணை ஜனாதிபதியும், அவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு, வைகோவிடம், ‘நீங்கள் பேச 2 நிமிடம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

இதை கேட்ட வைகோ, ‘இதுவே அதிகமான நேரம் தான்’ என்று குட்டுவைத்து தனது பேச்சை தொடங்கினார். அப்போது ‘அத்தியாவசிய பொருட்களின் மீதான விலையை உயர்த்துவது நாட்டு மக்களை மெதுவாக கொல்லும் விஷம்.

தானியங்கள் விலை, மசாலாப் பொருட்கள் விலை, சமையல் எண்ணெய் விலை, வெண்ணெய் விலை ஆகியவை உயர்ந்துள்ளது. உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெற வேண்டும். நீங்கள் அனுமதித்த நேரத்துக்குள் பேசி முடித்துவிட்டேன்’ என கூறினார்.

இதனை தொடர்ந்து வெங்கய்யா நாயுடு பேசும்போது, ‘இளைய மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வலிமையான பேச்சாளர்களில் வைகோவும் ஒருவர்.

இதை சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அவருடைய கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நேரத்தை எண்ணால் அதிகரிக்க முடியவில்லை’ என்று பாராட்டினார்.

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் இந்த பாராட்டு மழை, வைகோவுக்கு கிடைத்த புதிய அங்கீகாரமாக கருதி மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆவரவாரத்தில் துள்ளி குதிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.