மழைக்கால தொடர் ஏமாற்றம் அளிக்கிறது; காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த ஒன்றிய அரசு விரும்பாதது ஏமாற்றம் அளிக்கிறது,’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்களுக்கு முன்பாகவே நேற்று முன்தினம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. எதிர்க்கட்சிகள் இறுதிவரை அமர்ந்து விவாதம் செய்து மசோதாக்களை நிறைவேற்றத் தயாராக இருந்த போதிலும், ஆகஸ்ட் 12ம் தேதி வரை அவை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அரசுக்கு விருப்பம் இல்லை. தொடக்கத்தில் 32 மசோதாக்களை பட்டியலிட்டாலும், மக்களவையில் 7, மாநிலங்களவையில் 7 மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. ராஷ்டிரபத்னி விவகாரம் தொடர்பாக, மக்களவை காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்டதற்கு பதிலாக சோனியா காந்தி மன்னிப்புக் கேட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதால், ஒன்றரை நாள் அவை நடவடிக்கைகள் தடைபட்டது. பண மோசடி சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை. மக்கள் பிரச்னைகள், அமலாக்கத் துறைக்கு எதிரான காங்கிரசின் அணி திரட்டல் ஒரு சிறந்த நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.