உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா பங்காற்ற தயாராக உள்ளது: உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: எந்தவொரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அதிபர் புடின் தெரிவித்தார்.

மேலும் ரஷ்யா படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷ்ய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, உக்ரைன்-ரஷ்யா போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில்: உக்ரைனில் நிலவிவரும் சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாகவும், போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்றும் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.