புரோ கபடி லீக்: பரபரப்பான போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரில் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில், 9வது சீசன் இன்று தொடங்கியது. 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த சீசனில் பார்வையாளர்களுக்கு மத்தியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

12 அணிகள் கலந்து கொண்டு ஆடும் புரோ கபடி போட்டிகள் பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகரங்களில் நடத்தப்படுகின்றன. முதற்கட்ட போட்டிகள் பெங்களூருவில் நடக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் டபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் மோதின. அந்த போட்டியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து இன்றைய நாளின் 2-வது போட்டியாக பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளுமே சம பலத்துடன் கடுமையாக போட்டி போட்டு ஆடின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுக்க முதல் பாதி முடிவில் 17-17 என்ற புள்ளி கணக்கில் சமனில் இருந்தது.

2ம் பாதி ஆட்டமும் பரபரப்பாக இருந்தது. 2ம் பாதியிலும் பெங்களூரு அணி 17 புள்ளிகளை பெற, தெலுங்கு அணி 12 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதையடுத்து 34-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.