சிட்னி: ஆஸி.,யில் இந்திய மாணவர் ஒருவர் 11 முறை கத்தியால் குத்தப்பட்டார். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது இனவெறி தாக்குதல் என பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் சுபம் கார்க்(28). சென்னை ஐஐடி.,யில் பட்டம் பெற்ற இவர், பிஎச்டி., படிக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு நியூ சவுத்வேல்ஸ் பல்கலையில் படித்து வரும் நிலையில், கடந்த 6ம் தேதி ஏடிஎம் சென்று பணம் எடுத்து வந்துள்ளார்.
அப்போது அவரை அணுகிய ஒருவர், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். ஆனால், சுபம் கார்க் பணம் கொடுக்க மறுக்கவே மர்ம நபர் கத்தியால் கடுமையாக தாக்கினார். அதில் முகம், மார்பு, வயிறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
அந்த நிலைலேயே, வீட்டிற்கு சென்ற சுபம் கார்க்கை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அவரின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இனவெறி தாக்குதல் என குற்றம்சாட்டியுள்ள குடும்பத்தினர், மகனை பார்க்க ஆஸி., செல்வதற்கு விசா வழங்குவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement