முத்தம்பட்டியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே முத்தம்பட்டி, சாமியார்பட்டி பகுதியில் அமோகமாக விளைந்துள்ள சாமந்தி பூக்கள்  அறுவடை செய்யப்பட்டு தினசரி பூமார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள முத்தம்பட்டி, சாமியார்பட்டி, ஊத்துப்பட்டி, கலிக்கம்பட்டி, கோட்டைப்பட்டி, காமலாபுரம், பெருமாள்கோவில்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, தொப்பம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், செண்டுபூ, செவ்வந்திப்பூ, ஜாதிமல்லி, காக்கரட்டான், கோழிக்கொண்டை, மருகு, சம்மங்கி, ரோஜா, பட்டுரோஜா, முல்லை உள்ளிட்ட பூக்களை பயிரிடுவது வழக்கம்.

தற்போது செவ்வந்தி பூவில் சாந்தினி பூ எனப்படும் ஒட்டுரக ஹைபிரிட் இனத்தைச் சேர்ந்த பூக்களை பயிரிட்டு வருகின்றனர். முத்தம்பட்டி, சாமியார்பட்டி சிறுமலை அடிவாரப்பகுதியில் தற்போது தோட்டங்களில் சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குவதால் வயல்கள் மஞ்சள் ஆடையை விரித்தது போல் காட்சியளிக்கின்றன. இந்த ரக பூக்கள் செடியில் பூத்த பின்பு ஒருவாரம் வரை உதிராமல் தாக்குப்பிடிக்கும் என்பதால் விவசாயிகள் செடியில் மலர்ந்தாலும், விலையேற்றம் இருக்கும் நாட்களில் மட்டும் அதிகளவில் பறித்து பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கின்றனர். தற்போது சாமந்திப்பூ பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.50க்கு விற்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.