சென்னை: மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த செய்தியாளரின் உயிரிழப்புக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது, தனி நேர்வாக கருதி ஐம்பது லட்ச ரூபாயை நிவாரணமான வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்த முத்துக்கிருஷ்ணன், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
மறைந்த செய்தியாளர் முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது. அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.