“முக்கிய தலைவர்கள் கட்சியில் சேர இருக்கிறார்கள்" – மோடி, அமித் ஷா விசிட்-க்குப் பின் அண்ணாமலை

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்துக்குச் சென்றார். அங்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அமித் ஷா, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா

பின்னர் அங்கிருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், `அமித் ஷா தலைமையில் முக்கியமான ஒருவர் கட்சியில் சேரப்போவதாகச் சொல்லப்படுகிறதே…’ என்று கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “ஆமாம், முக்கிய தலைவர்கள் சேர வேண்டும் என காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்முடைய தலைவர்களைத் தொடர்பு கொண்டு சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான நேரம் வரும்” என்று கூறினார்.

அண்ணாமலை

மேலும் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆலோசனை நடந்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை, “நேற்று பிரதமர் திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குச் செல்லும் போது கட்சியின் மாநில தலைவர் என்கின்ற முறையில் என்னை வண்டியில் அழைத்துச் சென்றார். ஒரு மணி நேரம் பிரதமருடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் நிறையக் கேள்வி கேட்டார். பிரதமரைப் பொறுத்தவரையில், தமிழக மக்களின் மீது எல்லையற்ற அன்பு, பாசம் இருக்கிறது. தமிழக மக்களுக்கு இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் எதைப் போன்ற விஷயங்கள் மக்கள் நம்மிடம் கேட்கிறார்கள் என்று கேட்டார். இது 2024-ம் ஆண்டு தேர்தலைப் பற்றி, கூட்டணியைப் பற்றி பேசுவதற்கான நேரமில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.