பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91.
சென்னை தி.நகர் நாதமுனி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை 6:40 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது உடல் இன்று மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரூர்தாஸின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட படங்கள், எம்ஜிஆர் நடித்த தாய் சொல்லைத் தட்டாதே, அன்பே வா உள்ளிட்ட படங்கள், ஜெமினிகணேசன் நடித்த வாழவைத்த தெய்வம், திருமகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர்.
தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள தாஸ் என்ற பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல், தன்னையும் முன்னிறுத்திக்கொள்ளாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதியதால் இவர் இன்றளவும் பேசப்படுகிறார்.
newstm.in