காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு: மத்திய பிரதேச போலீஸ் நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் உமாங் சிங்கார் மீது  நவ்கான் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண், எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.

அதனால் எம்எல்ஏவுக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். இதுகுறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் துறைத் தலைவர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், ‘எம்எல்ஏ மீதான வழக்கு குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை; ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் அவர் மீது வழக்கு பதிந்திருக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.