ஒரு வாரமாக தண்ணீர் வடியாததால் 30,000 ஏக்கரில் சம்பா பயிர் அழுகின: சீர்காழி விவசாயிகள் வேதனை

சீர்காழி: சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வடியாததால் 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில  வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் ஒரே நாளில்  22 செ.மீட்டர் மழை கொட்டியது. மீண்டும் கடந்த வாரம் ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 43 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், எடமணல், திருமுல்லைவாசல், விளந்திட சமுத்திரம், அகனி, வள்ளுவக்குடி, மருதங்குடி, புங்கனூர், கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், கன்னியாகுடி, கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, திருநகரி உள்ளிட்ட பகுதிகளில்  நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. தற்போது மழைநீர் வடிய தொடங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் நடவு  செய்யப்பட்ட 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், ஒரு வாரமாக தேங்கியிருந்த மழை நீரில் அழுகி முற்றிலும் சேதமாகிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.  ஒன்றிய அரசு நேற்றுமுன்தினம் வரை பயிர்க்காப்பீடு செய்ய காலக்கெடு விதித்திருந்தது. இந்த மாதம் இறுதி வரை பயிர் காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.