பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்திருந்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
இதை அடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை ராணுவம் அனுப்பி உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. இதில், இரண்டு பேர் இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூட்டுப் படைகளின் தலைவர் பதவி தான் உயர்ந்த பதவி. இருப்பினும் அனைத்து முடிவுகளையும் ராணுவ தளபதியே எடுப்பார். அவருக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது. இந்தப் பதவிகளுக்கு உரியோரை, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுப்பார்.
இது தொடர்பாக, சமீபத்தில் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடன், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
நியூசிலாந்தில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு? – அரசு எடுக்கும் அதிரடி முடிவு!
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதே போல் கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிறப்பித்து உள்ளார்.
யார் இந்த அசிம் முனீர்?
லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், மங்களாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றவர். இவர், கார்ப்ஸ் கமாண்டர் குஜ்ரன்வாலாவாகவும் பணியாற்றி உள்ளார். மேலும் பாகிஸ்தானின் இரண்டு செல்வாக்குமிக்க புலனாய்வு அமைப்புகளான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) மற்றும் ராணுவ உளவுத் துறை தலைமை பொறுப்பையும் வகித்துள்ளார்.
இவர், ஐஎஸ்ஐ தலைவராக இருந்த காலம் வெறும் எட்டு மாதங்கள். 2019 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இம்ரான் கான் இவரை பதவி நீக்கம் செய்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 17வது ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.