மார்க்கெட் பகுதியில் 2வது நாளாக பற்றி எரியும் தீ; 400 கோடி பொருட்கள் சேதம்.!

டெல்லி சந்தினி சௌக் பகுதியில், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், கிடங்குகள் அடங்கிய பகிரத் பேலஸ் எனப்படும் வணிக வளாகத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஏற்பட்ட தீ, இது வரை 3 கட்டிடங்களை தரைமட்டமாக்கிவிட்டது. சுமார் 150 கடைகள் தீக்கிரையாகிவிட்டன. இன்று காலை நிலவரப்படி தீ மட்டுப்பட்டுவிடும் என நினைத்தபோது, அருகில் உள்ள கடைகளுக்கு பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.

இதனால் அருகருகில் உள்ள 5 அடுக்குமாடி கட்டிடங்களில் 3 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. எந்த உயிரிழப்புகளும், காயங்களும் இதுவரை ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க எடுத்த பல்வேறு முயற்சிகளை அடுத்து, இன்று காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் திடிரென அருகில் உள்ள கடைகளுக்கு பரவிய கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் தீயை அணைக்க இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 9 மணி நிலவரப்படி, 20 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்று இரவு முதல் இன்று வரை மொத்தம் 40 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனக்கூறும் அதிகாரிகள், மகாலட்சுமி மார்க்கெட்டில் தொடங்கிய தீ, அருகில் உள்ள எலக்ட்ரானிக் கடைகளில் பரவி பெருந்தீயாக பரவத் தொடங்கியதாக கூறுகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறையும், பலவீனமான கட்டமைப்புகளும் தான் தீ அணைப்பதில் தடையாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கடைகளின் உரிமையாளர்கள் தீயினால் சேதமடைந்த பொருட்களைத் தவிர மீதமுள்ள பொருட்களை எடுத்து செல்ல மாஸ்க் அணிந்து கொண்டு, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்கின்றனர். பெரும்பாலும் கடைக்காரர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

தீ பற்றி தகவல் கிடைத்தவுடன், தேசிய பேரிடர் மீட்பு குழு, நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிரடி படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, டெல்லி வடக்கு இணை ஆணையர் சாகர் சிங் கால்சி தெரிவித்துள்ளார். இதேபோல் கடந்த செப்டம்பர் மாதமும் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 80 கடைகள் தரைமட்டமானதாக அப்பகுதிவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தீவிபத்தால் சுமார் 400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இப்பகுதியில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.