உணவுக்கு கூட பணமில்லை!: பெங்களூருவில் கடன் தொல்லையில் சிக்கி தவித்த ஐ.டி. ஊழியர் 2 வயது மகளை கொன்ற கொடூரம்..!!

பெங்களூரு: பெங்களூருவில் கடன் தொல்லையில் சிக்கி தவித்த ஐ.டி. ஊழியர் ஒருவர் உணவுக்கு கூட பணம் இல்லை என கூறி தனது இரண்டு வயது குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. குஜராத்தை சேர்ந்த ராகுல் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஐ.டி. ஊழியரான ராகுல் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்த அவர், தனது சொந்த வீட்டிலேயே நகைகளை திருடி அடகு வைத்துவிட்டு காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே பணமின்றி தவித்த ராகுல், தனது மகளுடன் காரில் வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்தார்.

கோலாக் அருகே கெந்தட்டி கிராமத்தில் உள்ள ஏரியில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடலை கண்டெடுத்த போலீசார், அங்கு கேட்பாரற்று நின்றிருந்த கார் ராகுலுடையது என்பதை உறுதி செய்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் பசியில் அழுத குழந்தைக்கு உணவளிக்க கூட பணம் இல்லாததால் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். தானும் தற்கொலைக்கு முயன்றபோது ஏரியில் போதிய தண்ணீர் இல்லாததால் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.