
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரவி ரஞ்சன் என்பவர், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது முதுநிலை மாணவி ஒருவரை இந்தி கற்பதற்காக தனது இல்லத்திற்கு வரும்படி அழைத்துள்ளார்.
அந்த மாணவியும் படிக்கும் ஆர்வத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு மதுபானம் கொடுத்து மாணவியை பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, இதுபற்றி சக மாணவிகளிடம் கூறி உள்ளார். அவருக்கு ஆங்கிலத்தில் சரியாக பேச வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆன்லைன் வழியே செயலி ஒன்றை பயன்படுத்தி சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை சக மாணவ மாணவிகள் பல்கலை கழகத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்தனர். அதன்பிறகு, கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுபற்றி மத்திய பல்கலை கழகத்தின் வெளிநாட்டு பரிமாற்ற திட்ட இயக்குனரும் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாணவியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.
பாலியல் வன்கொடுமை செய்தியை தொடர்ந்து, வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்பு, பேராசிரியர் ரவி ரஞ்சன் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் அவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in