முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தனது ஆதரவாளர்களோடு பேரணியாக வந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா,”அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கண்டிப்பாக 2024இல் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். என்னை பொருத்தவரையில், நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
அந்த ஒரே எண்ணத்தில்தான் ஜெயலலிதா செயல்பட்டார். அவர் வழிதான் என்னுடைய வழி. எனக்கு என்று தனி வழி கிடையாது. எப்பொழுதும் நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்ய வேண்டியது முதல்வருடைய கடமை. உங்களுக்கு மக்கள்தான் இந்த ஆட்சியை கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுடைய துரோகத்தை நீங்கள் சம்பாதிக்க கூடாது.
அனைவரும் ஒன்று சேருவோம்
மாமன்ற உறுப்பினர்களை கண்டித்து வைக்க வேண்டும். அதே போல தவறுகள் செய்பவர்களை கண்டிக்க வேண்டும். இவை அனைத்தும் எனக்காக நான் கேட்கவில்லை. தமிழக மக்களுக்காகவே இதை நான் கேட்கிறேன்.
பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய நதி, மக்களுக்கு விவசாயத்திற்கும் தாகத்தை தீர்க்க எப்படி பயன்படுகிறதோ, அதே போல மிக விரைவில் அனைவரும் ஒன்று சேர்வோம். மற்ற மாநில மக்களோடு ஒப்பிடுகையில் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு தெரியும் யார் துரோகம் செய்தது என்று, நான் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
2024இன் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம். ஜெயலலிதா எப்படி செயல்பட்டரோ அதேபோல தான், நானும். தமிழக மக்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டு பெறக்கூடிய தைரியம் என்னிடம் இருக்கிறது” என்றார்.