ஜி20 தலைமையேற்பது இந்திய மக்களுக்கு பெருமை சேர்க்கும்: பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் பெருமிதம்

புதுடெல்லி: ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது அனைத்து இந்தியருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும் என டெல்லியில் பாஜவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜ தேசிய நிர்வாகிகளின் இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜி20க்கு இந்திய தலைமையேற்றுள்ளது அனைத்து இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். எல்லையோர கிராமத்தில் உள்ள மக்களுடன் கட்சி உறுப்பினர்கள் நேரடி தொடர்பில் ஈடுபட வேண்டும். இவை பார்வையாளர்களை ஈர்க்கும் இடங்களாக உருவாக்கப்படவேண்டும்” என்றார்.

கட்சியின் தலைவர் நட்டா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தேசிய நிர்வாகிகள், கட்சியின் மாநில பிரிவுகளின் தலைவர்கள், பொது செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் அடுத்த கட்ட சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது, தயாராவது, தேர்தல் வியூகம் மற்றும் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ தோல்வியடைந்த இடங்களில் 2024ல் வெற்றி பெறுவதற்காக கட்சியை பலப்படுத்துவதற்காக ஒன்றிய அமைச்சர்கள் உட்பட பல்வேறு குழு தலைவர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பணி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.