அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜெர்மனி அமைச்சர் சந்திப்பு

புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேயர்போக் இருதரப்பு உறவு உள்பட பல விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினார். ஜெர்மனி வெளியுறவு துறை அமைச்சர் அன்னலேனா பேயர்போக் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவு துறை  அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி இந்தியாவின் இயற்கை பங்குதாரர். 21ம் நுாற்றாண்டில் உலகளாவிய விவகாரங்களில் தீர்வு காண்பதில் இந்தியாவின் செல்வாக்கு முக்கியமானதாக  இருக்கும். இந்திய அரசு தனது  நாட்டு மக்களை தவிர ஜி-20 அமைப்பிலும் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த  இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் விரிவாக்கத்திற்காக  இதுவரை இல்லாத அளவில் இந்தியா அதிக ஆர்வம் காட்டுகிறது. இதில் இந்தியாவின் பக்கம் ஜெர்மனி துணை நிற்கும். பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள் இந்தியா மட்டுமில்லாமல் ஐரோப்பாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தசூழ்நிலையில், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மட்டுமில்லாமல் எரிசக்தி,பருவநிலை மாற்றம், பாதுகாப்பு கொள்கை உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கு ஜெர்மனி விரும்புகிறது என்று தெரிவித்தார்.  எரிசக்தி, வர்த்தகம், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.