ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி ஜி20 கூட்டமைப்பு விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் அடிப்படையில் இன்று நானும் கூட்டத்தில் பங்கேற்க செல்கின்றேன்.
தமிழ்நாட்டில் பாஜகவினர் காமெடி செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களே நகைச்சுவை செய்துவிட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவை கண்டு யாரும் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.
தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக, இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எனவே தமிழ்நாடு மக்கள் அதை பொருட்படுத்தவில்லை.
ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது 4 குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம். அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும். இதை பாஜக பயன்படுத்திக்கொள்ளும் என அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். முன்னதாக இந்த விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் இந்தியாவின் உத்தரவாதங்களை காபாற்றுவதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும் என பேசியிருந்தார்.