பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமானவர் பவன் கல்யாண தேர்தல் பிரச்சாரத்திற்காக ராணுவ வாகனம் ஒன்றை விலைக்கு வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக இருபுறமும் இருக்கும் பல வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க காரின் மேற்பகுதியில் அமர்ந்து பயங்கர வேகத்தில் சென்றார் பவன் கல்யாண் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வாங்கி இருக்கும் பிரச்சார வாகனமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடியது இந்த பிரச்சார வாகனம். இந்த வாகனம் ராணுவ வீரர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும் போது பயன்படுத்தும் டிரக் போன்று பச்சை நிறத்தில் இருக்கிறது.
இந்த பிரச்சார வாகனத்தை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வாகனத்தின் மாடல் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். ராணுவ வாகனத்தை தனிநபர் பயன்படுத்துவது அதுவும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.