திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும்
இந்தக் கல்லூரியில் சுமார் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியின் விளையாட்டு மைதானம் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்தும், மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தையம், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை செய்தும் வருகின்றனர்.
ஆனால், இந்த விளையாட்டு மைதானத்திற்குள் சில சமூக விரோதிகள் கோழிக்கறியின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதுமட்டுமல்லாமல், விளையாட்டு மைதானத்தில் ஆடு. மாடு, பன்றிகள் என்று அனைத்தும் சுற்றி திரிகிறது. அதனால், விளையாட்டு திடலில் பயிற்சி பெறுபவர்களுக்கு சிரமமாக உள்ளது. இது போன்று கால்நடைகள், விலங்குகள் சுற்றுவதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், கல்லூரியின் சுற்றுச்சுவரும் முழுமையாக கட்டி முடிக்காமல் உள்ளதால் கால்நடைகள், விலங்குகள் என்று அனைத்தும் உள்ளே நுழைகின்றன. இதற்காக, கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.