பிரபல மலையாள நடிகரும் நகைச்சுவை நடிகருமான உல்லாஸ் பந்தளத்தின் மனைவி ஆஷா, பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டார்.
மலையாள திரையுலக காமெடி நடிகர்களில் ஒருவர் உல்லாஸ் பந்தளம். ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமான உல்லாஸ் பிரபலமானதையடுத்து, மம்முட்டி நடித்த ‘தெய்வத்தின் ஸ்வந்தம் கிளீடஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.
அதன் பிறகு ‘மன்னார் மத்தை ஸ்பீக்கிங் 2’, ‘இது தாண்டா போலீஸ்’, ‘காமுகி’, ‘கும்பரீஸ்’, ‘ஹாஸ்யம்’, ‘கர்ணன் நெப்போலியன் பகத் சிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய மனைவி ஆஷா(38). இந்தத் தம்பதி குழந்தைகள் உள்ளிட்டோருடன் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பந்தளம் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உல்லாஸ், தனது மனைவி ஆஷாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக உல்லாசின் வீட்டிற்கு சென்ற அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர்.
அப்போது, வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்தபோது, மாடியில் உள்ள அறையில் ஆஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து ஆஷாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்த முந்தைய நாள் உல்லாசுக்கும், ஆஷாவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதனால் ஆஷா தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை உல்லாஸ் சென்று பார்த்தபோது மனைவியை காணவில்லை. எனவே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதோடு, இது தற்கொலை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஆஷாவின் தந்தை கூறுகையில், ‘எனது மகள் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே நான் இது குறித்து புகார் அளிக்க விரும்பவில்லை’ என்றார்.