ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ௫௦க்கும் மேற்பட்டோர், ‘கிரிப்டோகரன்சி’ முதலீட்டு மோசடியில், ௨௦ கோடி ரூபாய் வரை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம், இணையவழி பரிவர்த்தனைக்கான ஒரு சாதனமாகும்.
இந்நிலையில், மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த ஒரு கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனத்தின் பெயரில், மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த ௫௦க்கும் மேற்பட்டோர், இந்த மோசடியில், ௨௦ கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
போலீசில் அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
யு.ஏ.இ.,யைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் சார்பில், சமீபத்தில் ஹைதராபாதில் முதலீட்டாளர் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி சிலர் பேசினர்.
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, ௧௫௦ நாட்களில் மூன்று மடங்காக திரும்பக் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறப்பட்டது.
இதை நம்பி பலரும் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால், திட்டம் துவங்கிய ௫௦ நாட்களிலேயே, அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறியவர்கள் திடீரென மாயமாகினர்.
இணையவழியாக செய்யப்படும் பரிவர்த்தனைக்காக கொடுக்கப்பட்ட பயனாளர் பெயர், கடவுச் சொல் போன்றவையும் முடக்கப்பட்டன. இதனால் போட்ட முதலீட்டை திரும்பப் பெற முடியவில்லை.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்