பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, 500, 1000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தது. உள்நாட்டில் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையின் பயனாக கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதா, நாட்டின் பொருளாதாரம் வளரச்சி அடைந்ததா என்பன போன்ற கேள்விகளுக்கு இதுநாள்வரை தெளிவான பதில் மத்திய அரசிடம் இருந்து கிடைத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லாது என உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், தனிநபர்கள் சார்பில் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் எனவும், பொருளாதார ரீதியான கொள்கை முடிவு எடுகக மத்திய அரசுக்கு உரிமை உள்ளது” என்று உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனுதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தாலும், இத்தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதிகளில், நீதிபதி நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கின் தீர்ப்பில் தமக்கு உடன்பாடு இல்லை என்று பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவு என்பதால், இதில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்ற நீதிபதி கவாயின் கருத்தி்ல் தமக்கு உடன்பாடு இல்லை என்று நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார். ஆர்பிஐ சட்டப்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்ய இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையில் ரகசியம் தேவை என்று மத்திய அரசு கருதியிருந்தால், அதற்காக அவசர சட்டம் கொண்டு வந்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் எந்த பரிசீலனையும் இல்லாமல் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது உயர் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுவிட்டு, அவற்றைவிட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படு்த்தியது. 500, 1000 ரூபாயை விட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகத்தால் கருப்பு பணம் எப்படி ஒழியும்? என்ற கேள்விக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.