சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கை தமிழக அரசு திறம்பட நடத்தவில்லை என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்; அந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று தற்போதைய முதல்வரும், அவருடைய மகனும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது மேடைதோறும் முழங்கினர். ஆனால், கடந்த 20 மாத திமுக ஆட்சியில் நீட் தேர்வை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து, எனது தலைமையிலான அதிமுக அரசால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதன் பிறகு வந்த திமுக அரசு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த வழக்கை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக். 14-ம் தேதி இவ்வழக்கின் விசாரணை பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அன்று வழக்கை நடத்தாமல் திமுக அரசு வாய்தா கோரியதால், உச்ச நீதிமன்றம் நீட் வழக்கை 2023 ஜனவரி மாத விசாரணைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டது.
இதன்படி, ஜன. 3-ம் தேதி நீட் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, திமுக அரசு சார்பில் நீட் வழக்கை 6 மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு வாய்தா கோரப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்து, கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘நீங்கள் எடுக்கும் நடவடிக்கை பற்றி நீதிமன்றத்துக்குக் கவலை இல்லை. இந்த வழக்கை உடனடியாக முடிக்கும் வழியைப் பாருங்கள்’ என்று கண்டிப்புடன் கூறி, வழக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.
நீட் வழக்கை திமுக அரசு தக்க வழக்கறிஞர்களை நியமித்து, திறம்பட நடத்தாதது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, தங்கள் இயலாமையை மக்கள் மத்தியில் ஒப்புக்கொண்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம், தமிழக முதல்வரும், அவரது மகனும் மன்னிப்புகேட்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.