டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார் . ஆளுநரின் செய்லபாடுகள் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குடியரசு தலைவரிடம் அளித்தனர். கடந்த 9-ம் தேதி பேரவையில் ஆளுநர் மரபு மீறி நடந்தது தொடர்பாக குடியரசு தலைவரிடம் அரசின் பிரதிநிதிகள் நேரில் முறையிட்டனர்.
கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளியேறினார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது விமர்சனத்தை முன்வைத்தனர். தமிழ்நாடு ஆளுநர் கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டுவருவது குறித்தும் குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதனை நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்கியது. அப்போது ஆளுநர் செயல்பட்டுவரும் விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
அதனை விரிவாகக் கேட்டறிந்த குடியரசு தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் தனது குறிப்புடன் முதலமைச்சரின் கடிதத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.