பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான பல மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவெடுக்கப்பட்டது.

இது குறித்து மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறியதாவது,
“நாட்டின் கிராமப்புற வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய அளவிலான கூட்டுறவு இயற்கை வேளாண் சங்கம், கூட்டுறவு விதை சங்கம் மற்றும் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் என 3 புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைக்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எம்எஸ்இஎஸ் 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இயற்கை வேளாண் பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற ஏதுவாக, கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு ஏதுவாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் கொள்கைகள், திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு வேளாண் தொழில்நிறுவனங்கள் வெற்றிபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த சங்கங்களில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்கள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் (எஃப்பிஓ) ஆகியவை உறுப்பினர்களாக இணைய முடியும். இந்த அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவுசங்க விதிகளின்படி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த கூட்டுறவு சங்கங்கள், இயற்கை வேளாண் பொருட்களை அங்கீகரிப்பதுடன், அவற்றுக்கு அங்கக சான்றிதழையும் வழங்கும் பணியையும் மேற்கொள்ளும். உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான தேவை மற்றும் நுகர்வுக்கு இடையேயான இடைவெளியை சமன் செய்யவும் உதவும்.
உலக சந்தையில் இந்திய கூட்டுறவு சங்கங்களின் திறமையை வலுப்படுத்த உதவும். மேலும், தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இந்த கூட்டுறவு சங்கம் விளங்கும்” என்றார்.