உலக பொருளாதாரத்தின் தாக்கத்தால் 20 சதவிகித ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறதா ஷேர்சாட்?

இந்தியாவின் பிரபல சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட், தனது 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அண்மைக் காலமாக பணிநீக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. அந்த வரிசையில் பெங்களூருவைச் சேர்ந்த மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான ஷேர்சாட் நிறுவனம் மற்றும் அதன் ஷார்ட் வீடியோ தளமான மோஜ் நிறுவனம் தனது 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 5 பில்லியன் டாலர் மதிப்புடைய ஷேர் சாட் நிறுவனத்தில் சுமார் 2,200க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பணிநீக்க நடவடிக்கை காரணமாக 500 பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

image
இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் துயரமான, கடினமான முடிவை எடுத்துள்ளோம். தொடக்கத்தில் இருந்து எங்களுடன் பணிபுரிந்த 20 சதவீத சிறந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். நிறுவனத்தின் முதலீடு, சந்தையின் வளர்ச்சி சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலையற்ற பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்த கடினமான சூழலை கடந்துதான் மீண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பரில் ஷேர்சாட் நிறுவனத்தின் விளையாட்டு தளமான Jeet11 மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் பணியாளர்களில் 5 சதவீதப்பேரை அந்நிறுவனத்தினர் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சுமார் 100 ஊழியர்கள் வேலை இழந்தனர். அதைவிட மோசமான நிலை இப்போது ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.