அதிகரிக்கும் கொரோனா பரவல் கேரளாவில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரு வருடங்களுக்கு முன் நாடு முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைப்பிடிப்பது உள்பட கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கேரளா முழுவதும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு நேற்றிரவு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்கள், அலுவலகங்கள், பஸ் ரயில்கள் உள்பட பொது வாகனங்களில் செல்பவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர், சோப்பு ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.