45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்: அடுத்தடுத்து கடந்துசென்ற கப்பல்கள்

45 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து இரண்டு கப்பல்கள் கடந்து சென்றன.
ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இனைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து அந்தமான், விசாகப்பட்டினம், கோவா, கேரளா, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கடந்து செல்ல வந்திருந்த கப்பல்கள் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் காத்திருந்தது. இதையடுத்து பாம்பன் தூக்கு பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
image
இதையடுத்து பாம்பன் தூக்கு பாலத்தை படகுகள் கடந்து செல்ல பாம்பன் துறைமுக அதிகாரிகளின் அனுமதி அளித்ததால் சுமார் 45 நாட்களுக்குப் பிறகு இன்று பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. பாம்பன் பாலம் திறக்கப்பட்டதை அடுத்து மங்களூர் துறைமுகத்தில் இருந்து பைலட் கப்பல் ஒன்றும் அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து கேரளா நோக்கிச் செல்லும் சர்வே கப்பல் ஒன்று என மொத்தம் இரண்டு கப்பல்கள் பாம்பன் வடக்கு கடலில் இருந்து பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.
அதேபோல் தெற்கு கடல்பகுதியில் காத்திருந்த மிதவை கப்பல் ஒன்று பாம்பன் பாலத்தை கடந்து கோவா சென்றது. பாம்பன் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள் அடுத்தடுத்து சென்றதை பாம்பன் சாலை பாலத்தில் இருந்து மக்கள் கண்டு ரசித்ததுடன் கைதட்டி தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் கடந்து சென்ற கப்பல்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.