காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இத்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது வழக்கம். கோவில் வளாகத்தில் செயல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
திருக்கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி, செயல் அலுவலகத்தில் கடந்த எட்டாம் தேதி திருக்கோவில் பெண் ஊழியரிடம் முறைகேடாக நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமாக செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வேதமூர்த்தியை அந்த பெண் ஊழியர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் கோவில் ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி, திருச்செந்தூர் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி பரவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.