வருத்தப்பட வேண்டாம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல பதில் வரும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி: ‘பகுதிநேர ஆசிரியர்களுக்கு, முதல்வரிடம் இருந்து விரைவில் நல்ல பதில் கிடைக்கும்’ என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே அவர்களுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். முதல்வருடன், வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இதுகுறித்து பேசினேன்.

குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும். தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இதுதொடர்பாக முதல்வரிடம் இருந்து, விரைவில் நல்ல பதில் கிடைக்கும். நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்ற முயல்வோம். ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.