பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரத்தில் மக்களின் கருத்திற்கு ஏற்ப முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவு செய்வார் என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியளர்களை சந்தித்த திருமாவளவனிடம் பேனா சின்னம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு அவர், “சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்கின்ற கருத்து வலுவாக பேசப்படுகிறது.
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானவுடன், முதலமைச்சர் அவர்களை சந்தித்து, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக இந்த நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
கலைஞருக்கு நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும். அது சிறப்பாகவும் அமைய வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கத்தக்க வகையில் அந்த முடிவு இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.
கருத்து கேட்டு கூட்டம் நடந்திருக்கிறது முதல்வர் மக்களுடைய கருத்துக்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
முன்னதாக, மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்க்கவில்லை , அவர் ஆதரவு தான் தெரிவித்துள்ளார் என்று, திமுக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார்.