சென்னை மாவட்டம் – ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி – 29, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அழகிரி நகர் பகுதியில் குடியிருக்கும் சுமார் 250 குடியிருப்புகளுக்கு அப்பகுதியிலேயே தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகளைக் கட்டித் தர வலியுறுத்தி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனரை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அவரின் அந்த மனுவில், “கிரீம்ஸ் சாலையில் 11 3/4 கிரவுண்ட் உள்ள பகுதியில் சுமார் 250 குடியிருப்புகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 69 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இம்மக்களில் பெரும்பாலானோர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் முதல்வராக டாக்டர் கலைஞர் அவர்கள் செயல்பட்ட காலத்தில் 1999ஆம் ஆண்டு தாட்கோ மூலமாக 239 வீடுகளுக்கு கல்நார் ஓடுகள் கட்டித்தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மேம்பாடு செய்யப்பட்ட மாதிரி குடிசைப் பகுதியின் திறப்பு விழா அன்றைய சென்னை மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் இவ்விடத்திலிருந்து மூன்று கிரவுண்ட் இடம் அட்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 8 3/4 கிரவுண்ட் பகுதியில் நெருக்கடி மிகுந்த நிலையில் இம்மக்கள் வசிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
மேலும் இப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகளை கட்டித்தர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து சட்டமன்றத்தில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் பேசி உள்ளார்.
எனவே அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாங்கள் இப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவினை பெற்றுக் கொண்ட மேலாண்மை இயக்குனர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார்.