வேலூர் கொணவட்டத்தில் சாலையோரம் இறைச்சி கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக வீச்சு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளுடன், மருத்துவ கழிவுகளும் கொட்டுவதால் அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுகிறது. வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி முழுவதும் தினசரி 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து பெறப்படுகிறது. இதனை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கின்றனர்.

அதிகளவிலான குப்பைகள் மாநகராட்சியில் சேகரிக்கப்படுவதால், திடக்கழிவு மேலாண்மை மையங்களில் குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது. விரைவில் காய்கறி கழிவுகள், இலைகள், உணவுக்கழிவுகளை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் வேலூர் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இறைச்சி கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதனுடன், மருத்துவ கழிவுகளும் அதிகளவு வீசப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை முழுவதும் குப்பையாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கொணவட்டம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருக்கும் கழிவுகளை மூட்டைகளில் கட்டி வீசி விடுகின்றனர். இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இது ஒருபுறம் என்றால் தற்போது நகர பகுதியில் இயங்கி வரும் சில தனியார் மருத்துவமனை மற்றும் ரத்த பரிசோதனை நிலையங்களில் உபயோகப்படுத்தப்பட்ட பஞ்சுகள், ஊசிகள், சிரஞ்சுகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளது. தங்கள் சுயநலத்திற்காக பொது இடங்களில் செல்லக்கூடிய சாலை ஓரத்தில் வீசி விடுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சுற்றுசூழல் மாசடைந்து வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் கிளினிக் நடத்துபவர்களும் மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி வாகனங்களில் கொண்டு வந்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மருத்துவ கழிவுகளிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் ஏற்பட்டு அந்த சாலை வழியாக வாகனங்களில் செல்லும்போது மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.