டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: போதை பொருட்களின் வரிஏய்ப்பை தடுக்க தீர்ப்பாயம் வருகிறது

புதுடெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், போதை பொருட்களின் வரிஏய்ப்பை தடுக்கும் வகையில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும், சரக்கு  மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வரியான  ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்காக, மாநிலங்களுக்கான  இழப்பீடு 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. கடந்தாண்டுடன் காலக்கெடு முடிந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களின் வர்த்தகத்தில் நடக்கும் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் மற்றும் அதற்கான வழிமுறைகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களாக ஒன்றிய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் இடம்பெறவுள்ளனர். மேலும் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து குறைக்க வாய்ப்புள்ளதா? என ஆராய குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அது குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.