சர்வதேச அளவிலான ஆட்சி முறை தோல்வி அடைந்துவிட்டது: பிரதமர் நரேந்திர மோடி 

புதுடெல்லி: உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப்பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதாகவும் தற்போதைய நெருக்கடிகள் அதனை தெளிவாக உணர்த்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் முதல் அமர்வை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”உலகின் பல பகுதிகள் இன்று பிரச்சினையில் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த சில வருடங்களாக உலகம் அனுபவித்து வரும், நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், பெருந்தொற்று பொதுமுடக்கம், பயங்கரவாதம், போர் போன்றவை சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

பல வருட கால முன்னேற்றங்களுக்கு பின்னர், நீடித்த வளர்ச்சியின் இலக்குகளை எட்டுவதில் இன்று நாம் பின்னோக்கி செல்லும் அபாயத்தில் உள்ளோம். பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய தாங்கமுடியாத கடன்களில் போராடுகின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படுகின்ற வெப்பமயமாதல் விளைவுகளையும் அந்த நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால்தான், இந்தியா தலைமை வகிக்கும் இந்த ஜி20, உலகளாவிய தெற்கின் குரலாக ஒலிக்க முயல்கிறது.

உலகம் தீவிரமாக பிரிந்திருக்கம் நேரத்தில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். தற்போது இந்த அறையில் இல்லாதவர்களுக்காகவும்(இதில் பங்கேற்காத நாடுகளுக்காகவும்) நாம் பொறுப்பேற்க வேண்டும். முடிந்த வரையில் நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்சினைகள் உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது. உலகிற்கு தலைமை வகிக்க முயலும் எந்த ஒரு குழுவும், பாதிக்கப்படுகிறவர்களின் கருத்துக்களை கேட்காதபோது, அக்குழுவால் உலகளாவியத் தலைமைக்கு உரிமை கோர முடியாது. நாம் அனைவரும் எது நம்மை ஒருங்கிணைக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எது நம்மை பிரிக்கிறது என்பதில் இல்லை.” இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்த கூட்டத்தில், ஜி 20 உறுப்பு நாடுகளைத் தவிர, வங்கதேசம், எகிப்து, மொரீசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அமீரகம் ஆகிய 9 விருந்தினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போரில், அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும், ரஷ்யா சீனா கூட்டுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துவரும் நிலையில் உலகம் சந்தித்து வரும் முக்கியமான சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் முடிவில், இந்தியா ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது. பெங்களூருவில் நடந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு எந்தவித ஒருமித்த கருத்தும் கொண்ட கூட்டறிக்கை வெளியிடப்படாமல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.