66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்திருக்கிறார்கள். என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். இந்த வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி” என்றார்.

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 75 வயதான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். 2004 முதல் 2009 வரை கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.